வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் விவசாயி மரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குள்பட்ட பிரிஞ்சிமூலை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகையன் (45). இவர், இதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ரூ.80 ஆயிரம் கொடுத்து குத்தகை அடிப்படையில் சம்பா நெல் சாகுபடி மேற்கொண்டார். நேரடி விதைப்பு செய்யப்பட்ட அந்த வயல்களில் மழை இல்லாததால் விதைப்புத் தன்மை பாதிக்கப்பட்டதோடு, முளைத்த பயிர்களும் வளர்ச்சியின்றி இருந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வயலுக்கு சென்று வந்த அவர், வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்கினார். வயலில் போதிய தண்ணீர், மழை இல்லாததால் பயிர்கள் வளர்ச்சி குறைந்ததோடு, கருகும் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் சில நாள்களாக மன வேதனையில் காணப்பட்ட முருகையன் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

உயிரிழந்த முருகையனுக்கு மனைவி ராணி, மகள் நித்யா, மனவளர்ச்சி குறைந்த மகன் ஹரிகரன் உள்ளனர்.

இதையடுத்து, தலைஞாயிறு கடை வீதியில் அவரது சடலத்துடன் உறவினர்கள், பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காவலாளர்கள், வேதாரண்யம் வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில், வழக்குப் பதிவு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.