டெல்லிக்குச் செல்லும் திருவண்ணாமலை அருணாசலேசுவரரின் லட்டு; அகில இந்திய உணவுப் பாதுகாப்பு கண்காட்சியில் இடம்பெறுகிறது...
திருவண்ணாமலை
டெல்லியில் நடைபெறும் அகில இந்திய அளவிலான உணவுப் பாதுகாப்பு கண்காட்சியில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலின் பிரசாதங்களான லட்டு, அதிரசம், தேன்குழல், மிளகு வடை போன்றவை இடம்பெறுகின்றன.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் சார்பில், டெல்லியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெறுகின்றன.
இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள், அவற்றின் செய்முறைகள், தரம், பிரசாதத்தைப் பாதுகாப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
இதில், தங்கள் கோயில் பிரசாதத்துடன் அந்தந்தக் கோயில்களின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
அதன்படி, தமிழகத்தில் இருந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான திருவண்ணாமலை திரு அருணாசலேசுவரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருத்தணி திரு சுப்பிரமணியர் சுவாமி கோயில், சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், சங்கரன்கோவில் திரு சங்கர நாராயணசாமி கோயில், சுவாமிமலை திரு சுவாமிநாத சுவாமி கோயில், திருச்சி திருவரங்கம் அரங்கநாதர் கோயில்களின் அதிகாரிகள் தங்கள் கோயில்களில் செய்யப்படும் பிரசாதங்களுடன் கலந்து கொள்கின்றனர்.
திருவண்ணாமலை திரு அருணாசலேசுவரர் கோயிலில் அடியார்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டு, தேன்குழல், மிளகு வடை, அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்களுடன் கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் தலைமையிலான ஊழியர்கள் டெல்லியில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.