Arkenakar not warrant that no political party promises to protect the welfare of the people tavellaiyan stating
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் நலன் காக்கும் வாக்குறுதிகளை எந்த அரசியல் கட்சியும் அளிக்கவில்லை என்று த.வெள்ளையன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் 34–வது வணிகர் தினவிழா மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சேகர், ஜெயபால், ராம.சந்திரசேகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர், த.வெள்ளையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “சில்லரை வணிகர்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வர்த்தகம் கொண்டுவரப்பட்டு உள்ளது. எல்லா தொழில்களிலும் பன்னாட்டு நிறுவனங்கள் காலூன்ற மத்திய அரசு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உதவி செய்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள பணமில்லா பரிவர்த்தனையால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மே மாதம் 5–ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் உரிமை பிரகடன மாநாடு நடைபெற உள்ளது.
காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு ஆகியவை மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதையெல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் நலன் காக்கும் வாக்குறுதிகளை எந்த அரசியல் கட்சியும் அளிக்கவில்லை. விவசாயம், சில்லரை வணிகம் ஆகியவற்றை காப்போம் என்றும், காவிரியில் தண்ணீரை பெற்று தருவோம் என்றும் வாக்குறுதி அளிக்கப்படவில்லை. இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை.
ஐட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் போட்டுவிட்டு மக்கள் கருத்தை அறிந்து தான் செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. தமிழக மக்கள் நமது உரிமையை இழந்துவிடக் கூடாது.
கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை நிறுத்தும்படி நாங்கள் வலியுறுத்தினோம். அதன்படி கடந்த ஜனவரி 26–ஆம் தேதி முதல் பெரும்பாலான கடைகளில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. சில கடைகளில் இருப்பு உள்ளதை விற்பனை செய்து வருவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வணிகர் தினவிழா மாநில மாநாட்டிற்கு பிறகு பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்” என்று பேட்டியளித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆலோசகர் காசிபாண்டியன், துணைத் தலைவர் ரமேஷ், மாநகர தலைவர் வாசுதேவன், செயலாளர் துரையரசன், பொருளாளர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
