இந்த தண்ணீரைதான் குடிக்கணுமா? கலங்கிய குடிநீரை ஆட்சியரிடத்தில் கொண்டுவந்து மக்கள் முறையீடு...
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் கலங்கிய குடிநீரை பாட்டில்களில் கொண்டுவந்து கலங்கிய தண்ணீருடன் வந்து ஆட்சியரிடம் மக்கள் முறையிட்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுத்தனர்.
அதன்படி, தமிழ் மாநில காங்கிரசு இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையில் நிர்வாகிகள், பாட்டில்களில் கலங்கிய தண்ணீருடன் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், "உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் தமிழகத்தில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யும் குடிநீர் கலங்கியபடி உள்ளது. எனவே சுத்தமாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது திருட்டு சம்பவங்களும் அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க காவலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
மனு கொடுத்து விட்டு வெளியே வந்த த.மா.கா.வினர் தாங்கள் பாட்டில்களில் கொண்டு வந்த கலங்கிய நீரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊற்றிவிட்டுச் சென்றனர்.