தீப்பிடித்து எரிந்த பள்ளிப் பேருந்து.. மாணவர்களின் நிலைமை என்னாச்சு.. அரக்கோணத்தில் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகளை அழைத்து வந்துக் கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 10 மாணவிகளும் உயிர் தப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தினந்தோறும் பள்ளிக்கு அழைத்து செல்லவும் , பின்னர் வீட்டிற்கு திரும்ப கொண்டுவந்து விடவும் பள்ளி வாகனங்கள் வருவதுண்டு. இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை 6 மணி அளவில் சேந்தமங்கலம் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று பேருந்து புறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
திடீரென்று புறப்பட்ட 200 மீட்டர் தொலைவில், அரக்கோணம் - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்துக் கொண்டிருக்கும் போது, வாகனத்திலிருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், பேருந்தை உடனடியாக நிறுத்திவிட்டு மாணவர்கள் அனைவரையும் இறக்கிவிட்டு, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால் அதற்குள் மளமளவென எரியத் தொடங்கிய தீ, பேருந்து முழுவதும் பரவியது. இச்சம்பவத்தில் பள்ளி பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். இதுக்குறித்து நெமிலி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க:ரேஷன் கடை பெண் பணியாளர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு.!
பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஞ்சிபுரம் - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது