எம்பிபிஎஸ் சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு ரத்து வழக்கு - இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை!
மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு தரும் அரசாணை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீடு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் 85 சதவீத உள் ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வில் , தமிழக அரசு மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் மேல் முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் நூட்டி ராம்மோகன்ராவ், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநில பாடத்திட்ட மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் தங்கள் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என முறையிட்டனர்.
இதனையடுத்து, எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடர்பான அனைத்து மனுக்களையும் தங்கள் அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.