பூமிக்குள் புதைந்த அடுக்குமாடி தரைதளம்...
திருவள்ளூரில், அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளம், பூமிக்குள் புதைந்ததை அடுத்து, அந்த கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர், மவுனசாமி மடம் தெருவில், எஸ்.எஸ்.வி.கே. வனஜா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டடத்தின் தலைதளத்தில், ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. ஊழியர் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் படுக்கையறை திடீரென பூமிக்குள் புதைந்தது. சுமார் 10 டிக்கு கீழே, படுக்கை அறை புதைந்தது. கட்டிலில் படுத்திருந்த சந்திரசேகர், பள்ளத்தில் விழுந்ததால் அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.
சந்திரசேகரின் சத்தத்தைக் கேட்டுவந்த அவரது மனைவி, படுக்கை அறையில் கால் வைத்ததும் அவரும் பள்ளத்தில் விழுந்தார்.
இருவரும் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு, மேல் தளத்தில் இருந்தவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களும் விரைந்து வந்தனர்.
பின்னர், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளத்துக்குள் சிக்கிய சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, கட்டிட பொறியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், பாதுகாப்பு காரணமாக, மேல் தளத்தில் இருந்த மூன்று குடும்பத்தினர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், அந்த கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.