ஆந்திர கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு! நாங்கள் இந்தியர்கள் இல்லையா? - கதறும் தமிழக மீனவர்கள்!
இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதால் ஆந்திர கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 19 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீன் பிடித்தடைக்காலம் அண்மையில் தான் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை வழக்கம் போல் இலங்கை கடற்படை சிறை பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இலங்கை இருக்கும் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவே நாகை மற்றும் ராமநாதபுரம் மீனவர்கள் அஞ்சி வருகின்றனர்.
மேலும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அண்மையில் தான் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து வலியுறுத்தி இருந்தனர். இருப்பினும் இலங்கை கடற்படையினர் வேட்டை நாய்களை போல் தமிழக மீனவர்களை சுற்றி சுற்றி வருகின்றனர். இதனால் கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க சென்றால் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படலாம் என்று நாகை மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இலங்கை பகுதிகளை தவிர்த்து ஆந்திர கடல்பகுதிகளை நோக்கி தமிழக மீனவர்களின் கவனம் சென்றுள்ளது.
இலங்கை கடற்படையினர் தொல்லை ஆந்திர கடல் பகுதியில் இருக்காது என்று நம்பிக்கையுடன் நாகையை சேர்ந்த மீனவர்கள் 19 பேர் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையில் இடி விழுந்தது போல் ஆந்திர மீனவர்களின் செயல் இருந்துள்ளது. ஆந்திரா நமது அண்மை மாநிலம், நமது நாட்டின் ஒரு அங்கம் எனவே தமிழக மீனவர்களான நமக்கு அந்த கடல்பகுதியில் மீன்பிடிக்க உரிமை இருக்கிறது என்று தமிழக மீனவர்கள் கருதியுள்ளனர்.
ஆனால் தமிழக மீனவர்களை பார்த்து ஆந்திர மீனவர்களுக்கு கடும் கோபம் வந்துள்ளது. தங்கள் பகுதிக்கு தமிழக மீனவர்கள் வரத் தொடங்கினால், தங்களுக்கு மீன்கள் அதிகம் கிடைக்காது என்று கருதிய அவர்கள் நாகை மீனவர்கள் 19 பேரையும் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் நாகை மீனவர்கள் பிடித்து வைத்திருநத் மீன்களையும் ஆந்திர மீனவர்கள் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆந்திர கடல் பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மீட்டுத்தர வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியரிடம் அவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர். வேற்று நாட்டுக்காரனான சிங்களவன் தான் தமிழக மீனவர்களை சிறை பிடிக்கிறான் என்றால் இந்திய மீனவர்களான ஆந்திர மீனவர்களும் தமிழக மீனவர்களை சிறை பிடித்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.