கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: பேச்சுவார்த்தையை ஒத்திவைத்த ஆந்திரா...!
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசு துவக்கி உள்ளது. இந்த நிலையில், தமிழக - ஆந்திர அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஓடும் கொசஸ்தலை ஆறு தமிழகத்தின், திருவள்ளூர் மாவட்ட விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. கொசஸ்தலை ஆற்றில் இருந்து லங்கா கால்வாய் வழியாக நீர் தமிழகத்தை வந்து சேர்கிறது.
இந்த நிலையில் ஆந்திர அரசு, லங்கா கால்வாயை மறித்து நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டத் துவங்கி இருக்கிறது. ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொசஸ்தலை ஆற்றின் மூலமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் தடுப்பணைகள் முழுவதுமாகக் கட்டி முடிக்கப்பட்டால் தமிழகத்தைச் சேர்ந்த 10 கிராமங்கள் பாதிக்கப்படும்.
தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள், தடுப்பணை அருகே ஆந்திர அதிகாரிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், இன்று நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையை ஆந்திர அரசு ஒத்திவைத்துவிட்டது. மேலும் இந்த பேச்சுவார்த்தை வரும் 19 ஆம் தேதி நடத்தவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.