தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கிய நிலையில் பாமக.வின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் காரணமாக இரு தரப்பும் போட்டிப்போட்டு எதிர் தரப்பினரை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். அந்த வகையில் பாமக சட்டமன்ற கொறடாவும், சேலம் தொகுதி உறுப்பினருமான அருள்.ஐ கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கொறடா பொறுப்பில் இருந்து அருள், சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜிகே மணி ஆகியோரை விடுவிக்குமாறும், தங்கள் தரப்பை சேர்ந்தவர்களை அப்பொறுப்புக்கு பரிந்துரைத்து அன்புமணி தரப்பு எம்எல்ஏ.கள் மன அளித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இதற்கு முன்பாக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசிய அன்புமணி தரப்பு எம்எல்ஏ.கள் கொறடா, சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற நுழைவு வாயிலில் 3 சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டமன்ற கொறடா, சட்டமன்ற குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு எங்கள் தரப்பு எம்எல்ஏகளை நியமனம் செய்ய வேண்டும். எங்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே 9.30 மணியளவில் கூடிய சட்டமன்றம் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.