தலைமறைவாக சுற்றித்திரியும் பைனான்சியர் அன்புச்செழியன் - மீண்டும் முன் ஜாமின் கோரி மனு...!
தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கந்து வட்டி கொடுமை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பைனான்சியர் அசோக்குமாரின் டார்ச்சர் குறித்து அசோக்குமார் கைப்பட கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை தேடி வருகின்றனர்.
அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் சசிகுமார் நேரில் ஆஜராகி துணை ஆணையர் அரவிந்தனின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அன்புசெழியன் மீது இன்னும் பல்வேறு புகார்கள் வரும் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இதைதொடர்ந்து தலைமறைவான சினிமா பைனான்சியர் அன்புசெழியனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். தேனியில் உள்ள மூத்த அமைச்சரின் ஒருவர் வீட்டில் அன்புச்செழியன் தங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
மனு விசாரணைக்கு வந்த போது திரும்ப பெறுவதாக அன்புச்செழியனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து தற்போது மீண்டும் முன் ஜாமின் கோரி அன்புச்செழியன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கும் அசோக்குமாருக்கும் இடையே பரிவர்த்தனை கிடையாது என்றும் சசிகுமாருடன் மட்டுமே பண பரிவர்த்தனைகள் இருந்தது என கூறப்பட்டுள்ளது.