கரூரில் 1536 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம்; இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம் - ஆட்சியர் அறிவிப்பு...
கரூர்
கரூரில் முதற்கட்டமாக 1536 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்திலுள்ள உழைக்கும் பெண்களுக்கு தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் வாகனங்கலை வழங்க வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசியது: “தொலைநோக்குப் பார்வைகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு உள்ள சிரமங்களை உணர்ந்து பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வழங்க முடிவு எடுத்தார்.
மானியத்தில் ஸ்கூட்டர்
அதன்படி, 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 25000 இவற்றில் எது குறைவோ அத்தொகையை 2018 ஜனவரி 1 முதல் ஒரு இலட்சம் உழைக்கும் மகளிருக்கு வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கிட திட்டம் போட்டார். இந்தத் திட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக வழங்கவும் ஆணையிட்டார்.
இன்று முதல் விண்ணப்பம்
இந்த திட்டத்தின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1536 மகளிருக்கு வாகனம் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஜனவரி 22 (இன்று) முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.
தேவையானவை
விண்ணப்பத்துடன் பணிபுரிவதற்கான சான்று, ஓட்டுநர் உரிமம், இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயது சான்று உள்ளிட்டவற்றுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரிலோ, பதிவு அஞ்சலிலோ, விரைவு தபாலிலோ அனுப்பலாம்.
அனைத்துப் பேரூராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் இதற்கென தனிப்பிரிவு அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்படும். கிராம, நகர பகுதிகளில் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட மாவட்ட ஆட்சியரை தலைமையாகக் கொண்டு தேர்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தகுதிகள்
கரூர் மாவட்டத்திலுள்ள பணிகளுக்கு செல்லக்கூடிய 18 முதல் 40 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சம் உடைய பெண்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இத்திட்டம் வரும் 24-ஆம் தேதி சென்னையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது” என்று பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை இயக்குநர் எஸ். கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ் மற்றும் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.