தருமபுரி உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும் - மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை...
தருமபுரி
தருமபுரியில் மழைநீர் தேக்கி வைக்கும் அளவுக்கு அனைத்து ஏரிகளையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரியில் உள்ள விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிகை:
"தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலத்தில் விவசாய நீர்பாசனத்தில் ஏரிகள் முக்கிய பங்கு வகித்து வந்தன. கடந்த சில ஆண்டுகளாக ஏரிகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து வருவதால் ஏரிகளில் மழைநீரை போதிய அளவில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கோடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த மழையின்போது கிடைக்கும் நீரை ஏரிகளில் முறையாக தேக்கினால் அதன் மூலம் கோடைகாலத்திலும் ஓரளவிற்கு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஏரிகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி மழைநீரை அவற்றில் தேக்கி வைப்பதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. மானாவாரி பயிர் சாகுபடி அதிகமுள்ள இந்த மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் தற்போது தண்ணீரின்றி வறண்டு உள்ளன. குறிப்பாக பெரிய ஏரிகளான அன்னசாகரம் ஏரி, கிருஷ்ணாபுரம் ஏரி, புலிகரை ஏரி, சோகத்தூர் ஏரி ஆகியவற்றில் சிறிதளவு கூட தண்ணீர் இல்லை.
இந்த ஏரிகளின் பெரும்பகுதியை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் ஏரிகளில் தண்ணீரை தேக்கி வைக்கும் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
மழை பெய்யும் நேரங்களில் ஏரிகளுக்கு நீர் வரும் கால்வாய்களும் தூர்ந்து போயிருப்பதால் மழைநீர் ஏரிகளை சென்றடைவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு தீர்வு காண இந்த ஏரிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும்" என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.