all rajastanis shops closed in tamilnadu to give homage to inspector periyapandiyan
சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் தங்க வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜஸ்தான் மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, ராஜஸ்தானுக்குச் சென்றனர் தனிப்படை போலீஸார். இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த சென்னை, மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதை அடுத்து, தமிழகம் முழுதும் சோகத்தில் ஆழ்ந்தது. முதல்வர் முதல் அரசியல்வாதிகள் பலரும் பெரிய பாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உடலுக்கு மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு வாழ் ராஜஸ்தானியர் சங்கத்தினரும் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தினர்.
நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப் போய் உயிரிழந்த காரணத்தால், நகை மற்றும் அடகுக் கடைகள் அனைத்தையும் மூடி ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், வீரமரணம் அடைந்த பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகள் மூடப்பட்டதாக அவர்கள் கடைகளின் முன் நோட்டீஸையும் ஒட்டியிருந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தானியர் சங்கத்தினர், சென்னையில் மட்டும் 5000 கடைகளும், தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், ராஜஸ்தான் அரசு, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து, பெரிய பாண்டியனை சுட்ட கொள்ளையர்களை உடனடியாகப் பிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
