All parties against the NEET demonstrated within half an hour

திண்டுக்கல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல்லில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனைத்து கட்சியினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் அரை மணிநேரத்திற்குள் முடிந்ததால் பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையே ஆச்சரியத்தில் மூழ்கியது.

அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால் தூத்துக்குப் போட்டு இறந்தார் அரியலூர் மாணவி அனிதா. அவரின் மரணத்துக்கு பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன.

மாணவ, மாணவிகளின் தன்னெழுச்சிப் போராட்டங்களும், அரசியல் கட்சிகளின் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அவ்வளவு ஏன்? பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு கூட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்துக் கொண்டது.

இந்த நிலையில், தி.மு.க. தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்து அரசியல் கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, இ.பெ.செந்தில்குமார், ஆண்டிஅம்பலம், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பல்வேறுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் அப்துல்கனிராஜா, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் பசீர்அகமது, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சந்தானம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்பரசு, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்ததால் நீண்ட நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காவலாளர்கள் கருதினர். ஆனால், தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் ஆர்ப்பாட்டத்தை முடிடித்து கொண்டு அனைவரும் கிளம்பிவிட்டனர். இது காவலாளார்களுக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அரை மணி நேரத்திற்குள் முடிக்க எதுக்குயா இந்த ஆர்ப்பாட்டம். ஒருவேளை இதுதான் எதிர்ப்பை மட்டும் காட்டுவதா?