அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்...
கிருஷ்ணகிரி
அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டியில், தமிழ்நாடு மின்சார வாரியம், கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் நடந்த ஒப்பந்த தொழிலாளர்களின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணிவேல் தலைமை தாங்கினார்.
முருகன் முன்னிலை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருணாநிதி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு, அடையாள அட்டை வழங்க வேண்டும்.
அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ. 380 வழங்கிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர் திருப்பதி நன்றி கூறினார்.