பணமோசடி வழக்கில் அதிமுக பிரமுகர் கைது!
நாமக்கல்லில் அதிமுக நிர்வாகி கல்யாணி பணமோசடி செய்தாக கூறி தங்கராஜ் தீக்குளித்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. அதிமுக பிரமுகரான இவர் நூலகராக பணியாற்றி வருகிறார். கல்யாணியின் சொந்த கட்டடம் ஒன்றில் பஞ்சர் கடை வைத்திருப்பவர் தங்கராஜ். இவர் தனது சகோதரன் மகன் சித்தார்த்தன் என்பவருக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக கல்யாணியிடம் 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சித்தார்த்தனுக்கு அரசு பணி கிடைத்து விட்டதாக கூறி, பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். ஆனால், பணி நியமன ஆணை போலியானது என்பது தங்கராஜுக்கு தெரியவந்தது. இதையடுத்து, கல்யாணியிடம் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு கல்யாணி திட்டியதாக கூறப்படுகிறது.
பணம் கிடைக்காத விரக்தியில், தங்கராஜ் நேற்று முன்தினம் கல்யாணி வீட்டு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த தங்கராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தங்கராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து, கல்யாணியை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு அருகே உள்ள பாசூரில் உறவினர் வீட்டில் கல்யாணி தங்கியிருந்தபோது போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.