இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்
அதிமுக ஆட்சியில் உடனடி நடவடிக்கை
இந்து கடவுளை விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கந்த சஷ்டி கவசத்தை 2020 ஆம் ஆண்டு இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டம் என்னும் யூ டியூப் சேனல். இது தொடர்பாக புகார் வந்தவுடன், கருப்பர் கூட்டம் நெறியாளரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததோடு, இதற்கு போட்டியாக இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி பேசிய இந்து தமிழ் பேரவையைச் சேர்ந்தவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது தவிர, பிற நபர்களின்மீதும் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்து இருக்கிறது இந்தக் கூட்டம். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நடராஜர் மற்றும் தில்லைக்காளி குறித்து மைனர் விஜய் என்பவர் U2 Brutus என்ற யூ டியூப் சேனல் மூலம் சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தி அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனைக் கண்டித்தும், சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம் குறித்து அவதூறான கருத்தைப் பரப்பிய மைனர் விஜயை கைது செய்யக் கோரியும் வலியுறுத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிதம்பரத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தியதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் அமைதி காப்பது- அதிர்ச்சி அளிக்கிறது
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையைப் பின்பற்றும் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிற மதங்களை, பிறருடைய மத நம்பிக்கைகளை இழிவுபடுத்திப் பேசுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எந்த மதத்தை இழிவுபடுத்தி பேசினாலும் அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கும். முதலமைச்சர் என்பவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா - அவர்களின் வழியில் செயல்படுகின்ற ஆட்சி என்று அடிக்கடி சொல்லும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல என்று அடிக்கடி சொல்லும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தி.மு.க.வில் இருப்பவர்களில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் என்று கூறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அதிர்ச்சியோடும், வேதனையோடும் மக்கள் பார்க்கிறார்கள். பிற மதங்களையோ அல்லது பிற மதக் கடவுள்களையோ யார் பழித்துப் பேசினாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.

யூ டியூப் சேனல் மீது நடவடிக்கை
இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்பது சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு.எனவே, இந்துக் கடவுளை இழிவுபடுத்திய, இந்துக்களின் மனதை புண்படுத்திய, தரக் குறைவாகவும் நாகரிகமற்ற முறையிலும் இந்துத் தெய்வத்தை விமர்சித்துள்ள மேற்படி U2 Brutus என்ற யூ டியூப் சேனலை உடனடியாகத் தடை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
