`தஞ்சை சட்டசபை தொகுதிக்கு வருகிற 19–ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் அதிமுக, திமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனியில் புதன்கிழமை இரவு தி.மு.க. வேட்பாளர் அஞ்சுகம்பூபதியை ஆதரித்து தி.மு.க.வினர் பிரச்சாரம் செய்தனர். இவர்கள் பிரசாரம் முடிந்தவுடன் அதே இடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இரங்கசாமியை ஆதரித்து அ.தி.மு.க.வினர் பிரச்சாரம் செய்வதற்காக வந்தனர். இதே பகுதியில் தி.மு.க. தேர்தல் அலுவலகம் உள்ளது. அங்கு ஏராளமான தி.மு.க.வினர் கூடியிருந்தனர்.

அவர்கள் இந்த இடத்தில் அ.தி.மு.க.வினர் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்று இருக்கிறார்களா? என அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற காவலாளர்களிடம் கேட்டனர். அதற்கு அனுமதி பெற்று இருப்பதாக காவலாளர்கள் தெரிவித்தனர்.

ஒரே இடத்தில் அதிமுக, தி.மு.க.வினர் திரண்டு இருந்ததால் கூடுதல் காவல் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் 75–க்கும் மேற்பட்ட காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் பிரச்சாரம் முடித்துவிட்டு சென்றபோது முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க என்று முழக்கமிட்டனர். உடனே அங்கு திரண்டு இருந்த தி.மு.க.வினர் தலைவர் கருணாநிதி வாழ்க என்று முழக்கமிட்டனர்.

திடீரென இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்த கம்பியை சிலர் வளைத்து, ஒரு கொடி கம்பியை பிடுங்கினர்.

இதை பார்த்த தி.மு.க.வினர் ஆவேசமாக அ.தி.மு.க.வினரை நோக்கி ஓடி வந்தனர். அவர்களும் தி.மு.க.வினரை நோக்கி வந்ததால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

உடனே இரு கட்சியினரையும் காவலாளர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததால் மோதல் தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து அந்த பகுதியில் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.