கடும் பனிப்பொழிவால் கேள்விக் குறியான விவசாயம்; பருவமழையை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்...
நாமக்கல்
நாமக்கல்லில் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டு சோகத்தில் இருக்கும் விவசாயிகள் வட கிழக்கு பருவமழையை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு பருவமழை ஓரளவு பரவலாகவே பெய்தது.
நவம்பர் மாதத்தில் அடிக்கடி தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் மழை அடியோடு நின்றுவிட்டது. இதனால் நீர்நிலைகளில் நீர்வரத்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்று விவசாயிகளும், மக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாய் போனது.
நாமக்கல் மாவட்டத்தில் மழைக்கான அறிகுறியே இல்லை. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் பனிப் பொழிவு மறுநாள் காலை 9 மணி வரையில் நீடிக்கிறது.
மேலும், பகல் நேரங்களில் கடும் வெயிலும், இரவில் பனியும் என காலநிலை மாறிமாறி காணப்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வருடத்திற்கான பருவமழை இனிவரும் நாள்களில் பெய்யுமா? என்ற கவலை விவசாயிகளிடத்தில் எழுந்துள்ளது.