கடலூர்
நீண்ட நாள்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு திரும்பிய மீனவர்களின் படகுகள் நிறைய 20 டன் அளவுக்கு மீன்கள் சிக்கியிருந்தன. இதனால் மீனவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், அக்கரைகோரி, இராசாபேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் அதிகமான மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
கடந்த சில நாள்களாக கடலில் ஏற்பட்ட நீரோட்ட மாற்றத்தின் காரணமாகவும், கடல் சீற்றம் காரணமாகவும் மீனவர்கள் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்குவதில்லை.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடனே கரைக்குத் திரும்பினர்.
இதற்கிடையில் கடந்த வாரம் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடியது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஏராளமான மீனவர்கள் நேற்று அதிகாலை பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று எதிர்பாராத விதமாக, அவர்களது வலையில் அதிகளவு மீன்கள் சிக்கின. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரைக்குத் திரும்பினர். கடலுக்கு சென்று வந்த அனைத்து படகுகளிலும் மீன்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது
இந்த மீன்கள் அனைத்தும், கடலூர் துறைமுகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 20 டன் அளவிற்கு மீன்கள் இருந்தது.
இதில் கவளை வகை மீன்களும், கோலா வகை மீன்களே அதிகளவில் இருந்தன. 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி கவளை மீன்கள் ரூ.900–க்கு விற்பனையானது.
இதனை சென்னை, கோவை, விழுப்புரம் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
