இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளதால், அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்டுள்ள அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தொடக்கத்தில் இருந்தே அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிய அதிமுக வேட்பாளர்கள், அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னணியில் இருந்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அங்கு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர்கள் வெற்றியை நெருங்கி கொண்டிருப்பதால், அதிமுக தலைமை அலுவலகமே திருவிழா கோலாகலம் போல் காட்சியளிக்கிறது.
