அதிமுக உள்கட்சி பிரச்சனையால் புயல் நிவாரணப்பணி மந்தம் - தமிழிசை குற்றச்சாட்டு
அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையால் புயல் நிவாரணப்பணி மந்தமாக இருப்பதாகபாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேனி அருகே அரண்மனைப்புதூரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இதுவரை நிலைமை சீரடையவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதும், மீட்பு பணிகளும் அதிமுகவின் உள்கட்சி சூழலால் சீராக நடக்கவில்லையோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.
விரைவில் நிலையை சீராக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி உடல்நிலை குறித்து அதிமுக சார்பில் தம்பித்துரை நலம் விசாரித்தது நல்ல ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுத்துள்ளது.
நாளை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சென்று உடல் நலம் விசாரிக்க இருக்கிறேன். அவர் உடல் நலம் தேறி மீண்டும் அரசியல் பணிக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஜெயலலிதா மறைவையொட்டி பாஜக மறைமுகமாக தமிழகத்தில் அரசியல் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன். இன்னொரு கட்சி விவகாரத்தில் பாஜக இதுவரை தலையிட்டது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.