88 மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்; உங்கள் பெயரை சேர்த்தாச்சா?
தஞ்சாவூர்
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 88 மையங்களில் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடக்கிறது. நீங்களும் இதனை பயன்படுத்தி உங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது.
இதனையொட்டி வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தமுறை தஞ்சை தொகுதியில் மட்டும் நடைபெறாமல் இருந்தது.
தற்போது தஞ்சை சட்டமன்ற தொகுதியில் “சிறப்பு சுருக்க திருத்த முறை” நடைபெறுகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து இன்று வரை 1-1-2017 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் எண் 6-ல் விண்ணப்பிக்கலாம்.
பெயர் நீக்கம் செய்ய படிவம் எண்-7, பெயர் திருத்தம் மற்றும் வண்ண புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் எண்-8 மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பதிவை அதே சட்டமன்ற தொகுதியில் முகவரி மாறுதல் செய்வதற்கான படிவம் எண் 8 ஏ ஆகிய படிவங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 88 மையங்களில் நேற்று நடந்தது.
தஞ்சை தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமிற்கு ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை கூறியது:
“தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 88 மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமினை எனது தலைமையில் ஆர்.டி.ஓ., தாசில்தார் தலைமையில் அடங்கிய குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்” என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் குருமூர்த்தி, தஞ்சை மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், உதவி தேர்தல் அதிகாரி மாதவன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சிங்காரம் ஆகியோர் உடன் இருந்தனர்.