ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்கவில்லையா? என்ன செய்யலாம்?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பதிவு செய்தும் ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் தங்களது எண்களை பெறுவதற்காக தமிழகத்தில் 301 இடங்களில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று முதல், வரும் ஃபிப்ரவரி 28ம் தேதி வரை செயல்படும் இந்த மையங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வரும் ஃபிப்ரவரி 28ம் தேதி வரை 301 இடங்களில் பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான உதவி மையங்கள் செயல்படவுள்ளன.

தமிழ்நாட்டில், சுமார் ஆறரை கோடி பேருக்கு இதுவரை ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சேர்க்கைக்கு பதிவு செய்து ஆதார் அட்டை அல்லது ஆதார் எண் கிடைக்கப் பெறாதவர்கள், தொடர்ந்து ஆதார் சேர்க்கை மையங்களுக்கு சென்று பதிவு செய்வதால், இம்மையங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, ஆதார் எண் அல்லது அட்டை கிடைக்காதவர்களும், ஆதார் அட்டையைத் தொலைத்தவர்களும், ஆதார் எண்ணை தெரிந்துகொள்ள வசதியாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மொத்தம் 301 இடங்களில் ஆதார் உதவி மையங்களை அமைத்துள்ளது. இந்த மையங்கள் இன்று முதல் வரும் ஃபிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை செயல்படும். 

ஆதார் எண்ணுக்கு ஏற்கெனவே பதிவு செய்துவிட்டு, கிடைக்கப் பெறாத பொதுமக்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கைவிரல் ரேகை மற்றம் கருவிழிகளைப் பதிவு செய்து சில விநாடிகளில் தங்களது ஆதார் எண்ணை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணை அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து பதிவு செய்தபின்னர், 30 ரூபாய் கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம். மேலும், 10 ரூபாய் மட்டும் செலுத்தி, காகிதத்திலும் அச்சிட்டு பெற்றுக்கொள்ளலாம் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.