அதிர்ச்சியாகவும் பயமாகவும் உள்ளது - கருணை காட்ட நடிகர் விவேக் வேண்டுகோள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது எனவும் அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தாமிர உருக்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செம்பு கம்பி, கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த ஆலையில், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கந்தக-டை-ஆக்ஸைடு என்ற நச்சு வாயு வெளியானதால், அந்த ஆலை அமைந்துள்ள பகுதியை சுற்றிய பல கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. விஷவாயு கசிவால், சுற்றுவட்டார பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையையே மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், ஆலை விரிவாக்கப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஆலை விரிவாக்கப்பட்டால், மக்கள் வாழ்வதற்கே ஏற்ற பகுதியாக இது இருக்காது எனக்கூறும் அப்பகுதி மக்கள், ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது எனவும் அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.