மின்விசிறியில் தூக்குப்போட்டு அதிரடிப்படை காவலர் சாவு - இவருக்கும் பணிச்சுமைதான் காரணமோ?
ஈரோடு
ஈரோட்டில் அதிரடிப்படை காவலர் மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்தார். தற்கொலை காரணம் பணிச்சுமையா? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் சிறப்பு இலக்கு அதிரடிப்படை காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு சிறப்பு இலக்கு அதிரடிப்படை காவலராக கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கோபி (37) என்பவர் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் விருத்தாசலத்தில் வசித்து வருகின்றனர்.
கோபி காவலர் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்துவந்த நிலையில் நேற்று காலை தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை ஜன்னல் வழியாக பார்த்த அருகில் இருப்பவர்கள் கதவை திறக்க முயன்றும் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் திறக்க முடியவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் தூக்கு கயிற்றில் இருந்த கோபியின் உடலை மீட்டனர்.
பின்னர் இதுபற்றி சத்தியமங்கலம் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள் கோபியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? குடும்ப தகராறு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று விசாரித்து வருகின்றனர்.