ஆசிட் வீசப்பட்ட யமுனா பரிதாப மரணம்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்!!
சென்னை, மடிப்பாக்கம் அருகே ரத்த பரிசோதனைக் கூடத்தின் உரிமையாளரால் ஆசிட் ஊற்றி தீ வைத்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியர் யமுனா இன்று மரணம் அடைந்தார்.
சென்னை, புழுதிவாக்கம் சிவசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி யமுனா. இவர் வாணுவம்பேட்டையில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் லேப் டெக்னிஷியனாக பணிபுரிந்து வந்தார். யமுனா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்றார். அங்கு ஒரு மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உரிமையாளர் ராஜா என்பவர் யமுனாவிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ராஜா ஆத்திரமடைந்து, மருத்துவ ஆய்வுக்காக பாட்டிலில் வைத்திருந்த அமிலத்தை எடுத்து யமுனா மீது வீசினார். இதில், அவரது உடலில் தீப்பிடித்தது. அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் கதறினார். ராஜாவின் இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரும் அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு யமுனா அழைத்து செல்லப்பட்டார்.
40 சதவீதம் தீக்காயம் அவருக்கு இருப்பதால் அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யமுனா இன்று உயிரிழந்தார். யமுனா மரணம் அடைந்ததை அடுத்து ரத்த பரிசோதனைக் கூட உரிமையாளர் ராஜா மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.