'எங்களுக்கு மட்டும் இரட்டை வரியா?' - நாளை முதல் திரையரங்குகள் காலவரையற்ற ஸ்ட்ரைக்!
திட்டமிட்டபடி நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் திரையரங்குகள் மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி. மற்றும் நகராட்சி வரி விதிப்பால் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளின் விலை உயரும் என்பதால், திங்கட்கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து காடசிகளும் நிறுத்தப்படும் என்றும் நேற்று முன்தினம் அபிராமி ராமநாதன் கூறியிருந்தார்.
நேற்று அபிராமி ராமநாதன், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், இது குறித்த எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், அபிராமி ராமநாதன் - செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள ஆயிரம் தியேட்டர்கள் நாளை முதல் மூடப்படும் என்று கூறினார்.
கேளிக்கை வரி 30% , ஜி.எஸ்.டி. 28% மொத்தம் 58% உள்ளாட்சி வரி எல்லாம் சேர்த்து 68% வரி தாங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தற்போது 100 ரூபாய் வருவாயில் 58 விழுக்காடு வரி அரசாங்கத்துக்கே செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்றார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. இரட்டை வரி விதிப்பை எதிர்த்தே நாங்கள் போராடுகிறோம் என்றார். சினிமா டிக்கெட் கடட்ணத்தை உயர்த்த ஆவண செய்ய வேண்டும். மற்ற சேவைகள் போல் சினிமா துறையையும் ஒரே வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றார்.
கேளிக்கை வரி ரத்து செய்யப்படும வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படாது என்று தெரிவித்தார். 50 ரூபாய் முதல் 200 ரூபாய்க்குள் கட்டணத்தை நிர்ணயித்து வழங்குமாறு அரசிடம் கேட்டு கொண்டுள்ளதாகவும் கூறினார்.
மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் ஒரே வரி விதிப்பை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படும் பட தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஈடுகட்டப்படும். எனவே, இரட்டை வரி விதிப்பை எதிர்த்து திட்டமிட்டபடி நாளை முதல் தமிழக திரையரங்குகள் மூடப்படும் என்று அபிராமி ராமநாதன் கூறினார்.