திரையரங்கங்கள் வேலைநிறுத்தம் ரத்தாகுமா?? - அமைச்சருடன் அபிராமி ராமநாதன் ஆலோசனை
திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை குறைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளதாக தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு நேற்று நள்ளிரவு முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக பொருட்களின் விலை உயரும் என்ற கருத்து உள்ளது.
இதனிடையே தமிழத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாக அதிகரிக்கும் என தெரிகிறது. தமிழக அரசின் நிலையை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று கூறி , வரும் திங்கட்கிழமை முதல், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் இயங்காது என அபிராமி ராமநாதன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அபிராமி ராமநாதன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரை இன்று காலை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராபி ராமநாதன், கேளிக்கை வரி 30 சதவீதம், ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே 58 சதவீதமாக உள்ள வரியை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை குறைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
நாளை காலை எங்களது பொதுக்குழு அதாவது பல்வேறு மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்து பின் நாளை எங்களது முடிவுகளை தெரிவிப்போம். இந்த கூட்டத்துக்கு பின் திரையரங்குகள் வேலை நிறுத்தம் ரத்தாகுமா என்பது தெரியவரும் என்று அவர் தெரிவித்தார்.