சென்னையில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த இளம்பெண் கைது - ரூ.2 லட்சம் மதிப்புள்ள பான், குட்கா பறிமுதல்...!!!
தடைசெய்யப்பட்ட பான், குட்கா போன்ற போதை பொருட்களை பரபரப்பு மிகுந்த சென்னையின் முக்கிய பகுதியில் தயாரித்து பதுக்கி வைத்து விற்பனை செய்த இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நகரம் பான்பராக், பான் மசாலா, குட்கா, போன்ற போதைப் பொருட்களின் தயாரிப்பு நிலையமாக மாறிவருகிறது.
இளம் தலைமுறையினர் பாதிக்க படுகின்றனர் என்ற குற்றசாட்டு எழுந்ததையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன் பான் மசாலா, பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்களை தடை செய்தார்.
இதையடுத்து புழல் பகுதியில் இயங்கி வந்த மிகப்பெரிய பான் மசாலா தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு செய்தனர். பின்னர் போலீசாரும் ரெய்டு நடத்தி தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். அந்த சோதனையில் சிக்கிய டைரியில் பல போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் பெயர் இருப்பதாக கூறப்பட்டது.
சென்னையில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, மாவா போன்ற பொருட்கள் விற்க்கபடுவதை போலீசார் அவ்வபோது சோதனை நடத்தி கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், யானைக்கவுனி பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவா, குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் போன்றவற்றை தயாரித்து கடைகளில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் யானைக்கவுணி பகுதியில் சோதனையிட்டதில் வால்டாக்ஸ் சாலையில் உள்ள கடையில் ரகசியமாக பான்பராக் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் அந்த கடையின் உரிமையாளர் மனோகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் யானைக்கவுனி இருளப்பன் தெருவில் போதை பொருட்களை தயாரித்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த உரிமையாளர் மம்தா (35) என்பவரையும் அந்த கடையில் வேலை செய்த சோனு என்பவரையும் போலீசார் கைது செய்து கடையில் இருந்த பாவா புகையிலை 500 டப்பா, ஹான்ஸ் 70 பாக்கெட், பான்மசாலா 125 பாக்கெட், எம்.கோல்டு 40, உள்ளிட்ட 2 லட்சம் மதிப்புள்ள போதை வஸ்துகளை போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.