அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வயதான முகத்தோற்றம் கொண்டு அவதிப்பட்டு வந்த 20 வயது இளம்பெண்ணுக்கு உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் கோவை அரசு மருத்துவர்கள் சிகிச்சையளித்து இளம் முக தோற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வயதான முகத்தோற்றம் கொண்டு அவதிப்பட்டு வந்த 20 வயது இளம்பெண்ணுக்கு உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் கோவை அரசு மருத்துவர்கள் சிகிச்சையளித்து இளம் முக தோற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் 20 வயது பெண் ஒருவர், தனது முகம் 45 வயதுபோல் தோற்றம் அளிப்பதாகவும், இடது புருவத்தில் முடி உதிர்ந்துவிட்டதாகவும் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவருக்கு 'பேரி ரோம்பெர்க் சின்ட்ரோம்' என்ற அரிய வகை நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அவருக்கு கொழுப்பை முகத்தில் செலுத்தும் சிகிச்சை மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதனையடுத்து அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் முகம், முன்பே போல் இளம் தோற்றத்தில் சரி செய்யப்பட்டுள்ளது.
இதுக்குறித்து கோவை அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இது ஒரு அரிதான தன்னெதிர்ப்பு நோயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் ஒரு பக்கம் மட்டும் தசைகள் சுருங்கியும், தோலில் சுருக்கங்களுடனும் கொழுப்பு திசு அறவே நீங்கியும், வயதான தோற்றம் கொண்டும் இருப்பார்கள். சில நேரங்களில் புருவத்தில் முடியில்லாமல் கூட இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த பெண்ணை பரிசோதித்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அவருக்கு கொழுப்பை முகத்தில் செலுத்தும் சிகிச்சை மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுள்ளது. அதாவது உடலில் இடுப்பு பகுதியில் சேரும் கொழுப்பான திசுக்களை உறிஞ்சி எடுத்து முகத்தில் செலுத்துவதே கொழுப்பை செலுத்தும் சிகிச்சை ஆகும்.
பின் தலையில் உள்ள முடி வேர்களை தனியாக பிரித்து எடுத்து தேவையான இடத்தில் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சையே முடி மாற்று அறுவை சிகிச்சை ஆகும். இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளையும் மருத்துவர்கள் ரமணன், செந்தில்குமார், பிரகாஷ், கவிதா பிரியா, சிவக்குமார் ஆகியோர் அடங்கிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை குழு வெற்றிகரமாக செய்து முடித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் தற்போது புதுமையான தோற்றப் பொலிவோடு அந்த பெண் தன்னம்பிக்கையாக உள்ளதாகவும் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்களின் பணி பாராட்டுக்குரியது என்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
