அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த பெண் பலத்த காயம்; எல்லாம் தற்காலிக ஓட்டுநரின் லீலை...
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த பெண் பலத்த காயமடைந்ததால் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றோடு 7-வது நாளாக இந்தப் போராட்டம் தொடர்கிறது.
அதனால், தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் இந்தப் பேருந்துகளில் அதிகளவில் பயணித்த மக்கள், போக போக தற்காலிக பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்கள் தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்துவதும், அரசுப் பேருந்துகளை இயக்க சிரமப்படுவதை பார்த்தும் அவர்களை நம்பாமல் தனியார் பேருந்துகளுக்கு மாறிவிட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தற்காலிகப் பணியாளர்களை நியமித்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,நேற்று மாலையில் பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்தை தற்காலிக ஓட்டுநரான வினோத்குமார் என்பவர் பணி மனைக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது, அம்மா உணவகம் எதிரே சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த மோட்டாண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுபாஷிணி மீது பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வேதாரண்யம் காவலாளார்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.