சாராய பாட்டிலில் செத்து கிடந்த நத்தை; குடிகாரர்கள் பெரும் அதிர்ச்சி...
அரியலூர்
டாஸ்மாக் சாரயக் கடையில் விற்ற சாராய பாட்டில் ஒன்றில் நத்தை செத்துக் கிடந்ததை கண்ட குடிகாரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து கள்ளங்குறிச்சி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. நேற்று மதியம் கடை திறந்த சிறிது நேரத்தில் அரியலூரை சேர்ந்த தொழிலாளியான ஐயப்பன் (40) என்பவர் சாராய பாட்டில் ஒன்று வாங்கினார்.
பின்னர் வாங்கிய பாட்டிலின் மூடியை திறக்க முயன்றார். அப்போது பாட்டிலை பார்த்தார். அந்த சாராய பாட்டில் உள்ளே நத்தை ஒன்று செத்து கிடந்ததை கண்ட ஐயப்பன் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் நத்தை செத்து கிடந்த சாராய பாட்டிலை காண்பித்து ஐயப்பன் முறையிட்டார். அப்போது ஊழியர்கள் உற்பத்தி செய்கிற இடத்திலேயே நத்தை விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கு சாராய பாட்டில்கள் வாங்க வந்த மற்றவர்களும் இதுகுறித்து கேட்டனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், சாராயம் வாங்க வந்தவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஐயப்பன் அந்த சாராய பாட்டிலுடன், அதனை வாங்கியதற்கான ரசீதை ஊழியர்களிடம் வாங்கிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார்.
சாராய பாட்டிலில் நத்தை செத்து கிடந்தது குடிகாரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.