அசைவ உணவு கொடுத்ததால் தனியார் உணவகத்தின் மேலாளரை துப்பாக்கியால் சுட்ட வக்கீல் கைது...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு கொடுத்ததால் தனியார் உணவகத்தின் மேலாளரை துப்பாக்கியால் சுட்ட வழக்குரைஞரை காவலாளர்கள் கைது செய்தனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் மாதவன். இவர், சென்னை, அண்ணா நகரில் தங்கி வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சொந்தமாக, கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் விருந்தினர் இல்லம் ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் இரவு படூரில் உள்ள தனியார் உணவகத்துக்குச் சென்றுள்ளார் மாதவன். அங்கு சைவ உணவுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்கு தவறுதலாக அசைவ உணவு பரிமாறப்பட்டது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்களுக்கும், மாதவனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து, உணவகத்தின் மேலாளர், தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனால் மேலாளருடன் மாதவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதவன் தனது கார் ஓட்டுநரை அழைத்து, காரில் உள்ள பெட்டி ஒன்றை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
அந்த பெட்டியை ஓட்டுநரிடம் இருந்து வாங்கிய மாதவன், அதில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேலாளர் சங்கரலிங்கத்தை நோக்கிச் சுட்டார். ஆனால், குறிதவறி அங்கிருந்த கண்ணாடி தடுப்பில் குண்டு பாய்ந்தது. இதில் கண்ணாடி நொறுங்கியது.
இதனால் உணவகத் தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டனர். பின்னர், மாதவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேளம்பாக்கம் காவலாளர்கள், மாதவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரிடம் இருந்து ஐந்து குண்டுகள் கொண்ட துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர். துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் அவரிடம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.