A new laser tool to repair skin diseases worth Rs.3.5 lakh

திருவாரூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தோல் நோய்களை சரி செய்ய ரூ.3.5 இலட்சத்தில் புதிய லேசர் கருவி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டது.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல்நோய் சிகிச்சைப் பிரிவில் கதிர்வீச்சு (லேசர்) சிகிச்சைச் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் பேசியது:

“அனைத்துத் துறைகளையும் நவீன சிகிச்சை வசதிகளோடு மேம்படுத்தி வரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சைப் பிரிவில் கதிர்வீச்சு சிகிச்சை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

தோலின் ஏழு அடுக்குகளில் முதல் இரண்டு அடுக்குகளாக எபிடொமிஸ், டொமிஸ் ஆகியவை காணப்படுகின்றன. தோல் நிறத்திற்கு காரணமான இந்த அடுக்களில் காணப்படும் நோய்களை சரி செய்ய இந்தக் கதிர்வீச்சுக் கருவி உதவுகிறது.

கதிர்வீச்சின் கதிர்கள் தோலில் உள்ள "மெலனின்' என்ற நிறமியை மட்டுமே ஊடுருவி நிறத்தை உண்டாக்கும். தோலின் மற்றப் பகுதிகளுக்கு இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாது.

“யாக் லேசர்” எனப்படும் இக்கருவி மூலம் பிறவியிலேயே காணப்படும் தோலில் நிறமாற்ற வியாதிகளையும் சரிசெய்ய முடியும். மேலும், முகத்தில் காணப்படும் மங்கு, தேவை இல்லாத மச்சம், படர்மச்சம், பச்சை குத்தியிருத்தல் முதலியவற்றையும் அகற்றலாம்.

ரூ.3.5 இலட்சம் மதிப்புள்ள இக்கருவியின் மூலம் தோல் நோயாளிகள் பயனடைவார்கள்” என்று பேசினார்,

இந்த்அ நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் க.மயில்வாகனன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் செந்தில், துணை முதல்வர் மருத்துவர் வெற்றிவீரன், துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தோல்நோய் சிகிச்சைத்துறைத் தலைவர் பாலாஜி தலைமையில் மருத்துவர் ரவீந்திரபாபு, ரம்யா ஆகியோர் செய்திருந்தனர்.