பள்ளி கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் வரப்போகுதாம் - முதன்மை கல்வி அதிகாரி சொல்றாரு...
கடலூர்
வருகிற கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் வரப்போகிறது என்று முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக 29 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ள உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது.
இதில், முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் பேசியது:
"வருகிற கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் வரப்போகிறது. தமிழகத்தை எட்டு மண்டலங்களாக பிரித்து மண்டல இயக்குனர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் மூன்று ஒன்றியங்களுக்கு ஒரு மாவட்ட கல்வி அதிகாரி வீதம் நியமிக்கப்படவுள்ளார். அவருக்கு கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இரண்டு உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் வீதம் 6 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்களின் கட்டுப்பாட்டில் தான் எல்.கே.ஜி. முதல் அனைத்து பள்ளிகளும் இருக்கும். இதுபோன்ற மாற்றங்கள் வர இருப்பதால், முதல் கட்டமாக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக நம் மாவட்டத்தில் 29 குழுக்களை அமைத்துள்ளோம். எந்தெந்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற பட்டியலும் உங்களிடம் தரப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் பற்றிய விவரங்களை சேகரித்து அன்றன்று அறிக்கை தர வேண்டும். நாளை (அதாவது இன்று) முதல் இந்த பணியை தொடங்கப்போகிறீர்கள், வருகிற மே மாதம் முதல் வாரத்துக்குள் பணியை முடித்து விட வேண்டும்.
நந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் மக்கள் கல்விச்சீர் வழங்கி உள்ளனர். இதற்காக கிராம மக்களை பாராட்டுகிறேன். அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஈடுபாட்டோடு பணியாற்றியதால் கிராம மக்களே சீர் வழங்கி உள்ளனர்.
இதேபோல எல்லா தலைமை ஆசிரியர்களும் அக்கறையோடு பணியாற்றினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.