இராமேசுவரத்தில் 4–வது நாளாக கடும் சூறாவளிகாற்று; கடல் கொந்தளிப்பும் இருப்பதால் மக்கள் பீதி...
இராமநாதபுரம்
இராமேசுவரத்தில் 4–வது நாளாக கடும் சூறாவளி காற்று வீசுவதாலும், கடல் கொந்தளிப்புடன் இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், பாம்பன் உள்ளிட்ட இராமேசுவரம் தீவு பகுதி முழுவதும் தொடர்ந்து கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது. மேலும், கடல் கொந்தளிப்புடனும் காணப்படுகிறது.
இந்த நிலை நேற்று 4–வது நாளாக நீடித்தது. இந்தக் காற்றால் சாலைகளில் மணல் அள்ளி தூற்றுவதால் வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தொடர்ந்து பலத்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் அடியார்கள் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து சுற்றுலா வாகனங்களும் கம்பிபாடு பகுதியுடன் நிறுத்தப்படுகிறது.
வழக்கத்தைக் காட்டிலும் முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் சீறி எழுந்தன. பாம்பன் பாலத்தில் இரயில்கள் மெதுவாக இயக்கப்படுகிறது.
பலத்த காற்று வீசும்போது இரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தானியங்கி சிக்னல் கிடைத்தவுடன் புறப்பட்டு சென்று வருகின்றன. இதனால் அனைத்து இரயில்களும் இராமேசுவரம் வந்து செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டுள்ளது.