நான்கு வயது மகனை சேலையில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த தாய்; தற்கொலையா? விசாரிக்கிறது காவல்துறை…
சேலம்
சேலத்தில் நான்கு வயது மகனை சேலையில் கட்டுக்கொண்டு கிணற்றில் தாய் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையா? கொலையா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரிக்கிறது.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி சுபா (34). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
கடந்த அக்டோபர் 12-ஆம் தேதியில் இருந்து சுபா, மூன்றாவது மகன் கிஷோர் (4) ஆகிய இருவரையும் காணவில்லை என்று பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார் கணவர் ரமேஷ். ஆனால், மனைவியும், மகனும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, ரமேஷ், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், நேற்று காலை கேட்டுகாடு பகுதியில் உள்ள கிணற்றில் சுபா, கிஷோர் ஆகிய இருவரின் சடலம் மிதந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் அங்கு வந்த அன்னதானப்பட்டி காவலாளர்கள் இருவரின் சடலத்தையும் மீட்டனர். அவர்களின் உடல்களை தூக்கும்போது மகன் கிஷோரை தனது சேலையால் இடுப்பில் கட்டியவாறு கிணற்றில் குதித்தது தெரிந்தது.
சுபா எதனால் இறந்தார்? தற்கொலையா? கொலையா? குடும்பத் தகராறா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்று பல்வேறு கோணத்தில் காவலாளர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர்.