அரசு பள்ளிக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை இலவசமாக எழுதி வைத்து விட்டு இறந்த விவசாயி...! ஏன் தெரியுமா?
உயிரிழந்த மகனின் ஆசையை நிறைவேற்ற ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு விவசாயி இறந்துவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னநாச்சிமுத்து. இவர் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.
இவருக்கு நடராஜன் என்ற மகன் இருந்தார். இவர் உடல் நலம் சரியில்லாமல் 10 வருடங்கள் படுத்த படுக்கையாக கிடந்து கடந்த 2014 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.
நடராஜன் சாகும் முன்பு தந்தை நாச்சிமுத்துவிடம் நன்றாக படித்து வேலைக்கு போக வேண்டும் என்ற என் கனவு நிறைவேறவில்லை எனவும் அதனால் தனது சொத்தின் பங்கை அம்மாபாளையம் அரசு பள்ளிக்கு எழுதி கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
உயிரிழந்த மகனின் ஆசையை நிறைவேற்ற நாச்சிமுத்து, அம்மாபாளையம் அரசு பள்ளிக்கு தனது 4 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை உயில் எழுதி மகள் ஈஸ்வரி கையில் கொடுத்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் நாச்சிமுத்து இறந்து விட்ட நிலையில், தந்தை எழுதி கொடுத்த உயிலை அவரது மகள் ஈஸ்வரி கல்வி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.