குடி போதையில் போலீஸ் பைக்கை ஓட்டிச்சென்ற ஆசாமி...
கர்நாடக மாநிலம், ஹாசன் நகரில் குடி போதையில் இருந்த இளைஞர், போக்குவரத்து காவலரின் தொப்பியை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தையும் எடுத்து ஓட்டியுள்ளார். இதைப் பார்த்த போக்குவரத்து காவலர், குடிபோதை இளைஞரை தொடர்ந்து சென்று தொப்பி மற்றும் வாகனத்தை மீட்டனர்.
கர்நாடகம், ஹாசன் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அவர், இருசக்கர வாகனத்தின் சாவியை வண்டியிலேயே விட்டுச் சென்றுள்ளார். மேலும், காவலர் தொப்பியையும் வண்டியின் மீது வைத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த குடிபோதை ஆசாமி ஒருவர், வாகனம் அருகே சென்று தொப்பியை அணிந்து கொண்டும், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதைப்பார்த்து பதறிய சக காவலர் ஒருவர், காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தேடுதலில் ஈடுபட்ட அதிகாரிகள், அந்த இளைஞரை பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர், நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரின் பெயர் போபோ என்பதும், குடி போதையில் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து குடிபோதை ஆசாமியை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.