செல்போன் பேசியபடி பேருந்து ஓட்டிய டிரைவருக்கு நூதன தண்டனை கொடுத்த போலீசார்..!
செல்போன் பேசியபடி பேருந்து ஓட்டிய டிரைவருக்கு போலீசார் நூதன தண்டனை
பொள்ளாச்சியில், செல்போன் பேசிய படி தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் வித்தியாசமான தண்டனை வழங்கி உள்ளனர்.
பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம், மீனாட்சிபுரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். முள்ளுபாடியை சேர்ந்த டிரைவர் முருகானந்தம்(28) என்பவர் பேருந்தை ஓட்டினார். பயணத்தின் போது டிரைவர் முருகானந்தம் தனது செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டியுள்ளார்.
இந்த காட்சியை, தனது செல்போன் மூலம் படம் பிடித்து அதனை பொள்ளாச்சி டிஎஸ்பி.,கிருஷ்ணமூர்த்தியிடம் காண்பித்து முறையிட்டனர்.
பின்னர் டிரைவர் முருகானந்தத்தை ஒரு நாள் முழுவதும் சிக்னலில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என நூதன தண்டனையை வழங்கினார்.
இதையடுத்து, பொள்ளாச்சி- கோவை ரோடு காந்தி சிலை சிக்னல் அருகே நேற்று மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை, செல்போன் பேசிகொண்டு பேருந்தை ஓட்டிய டிரைவர் முருகானந்தம் போக்குவரத்து சிக்னலில் நின்றபடி வாகனங்களை சீர்படுத்தி ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
அதுமட்டுமல்லாமல், வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்றவர்களுக்கு அறிவுரை வழங்கியும் அவரது பணியை தொடர்ந்தார்.இதனை போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் கவனித்து வருகின்றனர்.
மேலும் இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.