A 12 year old boy driving a motor cycle
சேலம்
சேலத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற 12 வயது சிறுவன் நிலை தடுமாறி பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள எடப்பட்டி வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருடைய மகன் ஜெயப் பிரகாஷ் (12). இவன் வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று இரவு 7 மணியளவில் மாணவன் ஜெயப் பிரகாஷ், தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் கத்திரிப்பட்டியில் இருந்து எடப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தான்.
அப்போது, அந்த வழியாக எடப்பட்டியில் இருந்து கத்திரிப்பட்டிக்கு தனியார் பள்ளி பேருந்து ஒன்று எதிரே சென்றது. அந்த பகுதியில் சாலை போடும் பணிக்காக சாலையோரம் மண் கொட்டப்பட்டிருந்தது.
அதில், மோட்டார் சைக்கிள் ஏறியதில், நிலை தடுமாறிய மாணவன் ஜெயப்பிரகாஷ், பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
