85 people arrested in the raid on the rails

கோயம்புத்தூர்

புதிதாக கட்டப்பட்ட இரயில் வழித்தடங்களில் மக்களுக்குப் பயன்படும் நேரத்தில் இரயில்களை இயக்குமாறு தண்டவாளத்தில் தலை வைத்துப் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 85 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

பொள்ளாச்சி - போத்தனூர், பொள்ளாச்சி - திண்டுக்கல், பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் மீட்டர் கேஜ் இரயில் பாதையை, அகல இரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009-ல் இரயில்கள் நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கின.

கடந்த 2015-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் பணி முடிக்கப்பட்டு ஒரு சில இரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

2016-ல் பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு இரயில்கள் இயக்கப்பட்டன.

பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மார்சில் இரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் முடிவடைந்து மூன்று மாதங்களாகியும் இன்னும் இரயில்கள் இயக்கப்படவில்லை.

இதனையடுத்து, இரயில்கள் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஜூலை 15-ஆம் தேதி, கோவையில் இருந்து போத்தனூர் வழியாக இரயில் இயக்கப்பட்டது.

மொத்தமாக அகல இரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.850 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டன. பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடத்தில் பணிகள் முடிக்கப்பட்டும், கோவையில் இருந்து ஒரு இரயில் மட்டும் மக்களுக்குப் பயன்படாத நேரத்தில், ஒரே முறை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொள்ளாச்சி - திண்டுக்கல், பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடங்களில் இயக்கப்பட்ட இரயில்களும் நிறுத்தப்பட்டு ஒரே இரயில் மட்டும் இயக்கப்படுகிறது.
இதனால், ரூ.850 கோடி செலவு செய்தும் இரயில்கள் இயக்கப்படாமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால், அந்த வழித்தடங்களில் இரயில்களை இயக்கக் கோரி அரசியல் கட்சியினரும், இயக்கங்களும், மக்களுடன் சேர்ந்து இரயில்வே துறை அதிகாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தற்போதுவரை மக்களுக்குப் பயன்படும் நேரத்தில் அதிக இரயில்கள் இயக்கப்படுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர், மக்கள் சார்பில் பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடத்தில், வடுகபாளையம் பிரிவு இரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்துப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதில், தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், மதிமுக மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில், மதிமுக நகரச் செயலாளர் துரைபாய், திமுக நகரச் செயலாளர் தென்றல் செல்வராஜ், திமுக இளைஞரணி நிர்வாகி நவநீதகிருஷ்ணன், தமுமுக நகரச் செயலாளர் முஸ்தபா, தமாகா மாவட்டத் தலைவர் குணசேகர், காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர்.எம்.அருள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ, திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, இந்திய ஜனநாயகர் வாலிபர் சங்கத்தினர், பொள்ளாச்சி ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.