கேரள அரசைக் கண்டித்து 8 கிராம மக்கள் தமிழக தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம்...
திண்டுக்கல்
கேரள மாநில அரசைக் கண்டித்து எட்டு கிராம மக்கள், வியாபாரிகள் தமிழக தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள மூணாறு, பள்ளிவாசல், ஆனைவிரட்டி, வெள்ளத்தூவல், பைசன்வாலி, சின்னக்கானல், சாந்தாம்பாறை, ஆனவிலாசம் ஆகிய கிராமங்களில் வீடு, கட்டிடங்கள் கட்டவும், நட்டு வளர்த்த மரங்களை வெட்டவும் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், வீடுகள், கடைகளுக்கு அரசு நிலப்பட்டா வழங்கவும் மறுக்கிறது.
கேரள அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் அடிமாலியில் கொச்சி - மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் எறும்புபோல நின்றன.
இதனையடுத்து காவலாளர்கள், போக்குவரத்துக்கு இடையூறின்றி போராட்டம் செய்யுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது.
இதனையடுத்து அவர்கள், சாலையோரத்தில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை வியாபார விவசாயி ஏகோபன சமிதி சங்க தலைவர் திவாகரன் தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமலிருக்க பலத்த காவலர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி எட்டு கிராமங்களிலும் வியாபாரிகள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மூணாறு உள்பட எட்டு கிராமங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.