இலங்கை சிறைகளில் இருந்து ஒரே நாளில் 77 தமிழக மீனவர்கள் விடுதலை….கொண்டாட்டத்தில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை…
இலங்கையின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததமிழக மீனவர்கள் 77 பேரை, அந்நாட்டு அரசு நேற்று விடுதலை செய்தது. இதையடுத்து இன்று அவர்கள் தமிழகம் திரும்புகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்வது அடிக்கடி நடைபெறுகிறது.
அந்த வகையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 92 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைகளில் அடைத்தனர். மீனவர்களுடன் 160-க்கும் மேற்பட்ட படகுகளையும் பிடித்துச் சென்று இருக்கிறார்கள்.
இலங்கை சிறைகளில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதைத்தொடர்ந்து, முதல் கட்டமாக 22 படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் அந்த படகுகள் இன்னும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களில் 16 பேர் ராமேசுவரத்தையும், 6 பேர் நம்புதாளையையும், 12 பேர் மண்டபத்தையும், 18 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தையும், 17 பேர் காரைக்கால் பகுதியையும், 8 பேர் நாகப்பட்டினத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
விடுதலை செய்யப்பட்ட 77 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இன்று அல்லது நாளை அவர்கள் அனைவரும் தமிழகம் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் தவிர இலங்கை சிறைகளில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 பேர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 பேர், நம்புதாளையைச் சேர்ந்த 4 பேர் என மேலும் 15 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களும் இன்னும் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.