கட்டண உயர்வை ரத்து செய்யகோரி போராடிய தனியார் கல்லூரி மாணவர்கள் 76 பேர் கைது...
திருச்சி
பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் போராடிய தனியார் கல்லூரி மாணவர்கள் 76 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கட்டண உயர்வு
தமிழக அதிமுக அரசின் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், மாணவ, மாணவிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் திருச்சி மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 2-வது நாளாக திருச்சி மாவட்டம், கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் மேல சிந்தாமணி சந்தை வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
போராட்டம்
பின்னர் திருச்சி - கரூர் புறவழிச் சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அதனைத் ரத்து செய் ரத்து செய் பேருந்து கட்டணத்தை ரத்து செய் என்று முழக்கங்களையும் எழுப்பினர்.
கைது
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் நான்கு மாணவிகள் உள்பட 76 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்தப் போராட்டத்தால் திருச்சி - கரூர் புறவழிச் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.