75 buses broken in 9 counties by kaduvetti guru death
காடுவெட்டி குரு மரணத்தை தொடர்ந்து 9 மாவட்டங்களில் வன்முறை வெடுத்துள்ளது. இதை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவருக்கு நீண்ட நாட்களாகவே நுரையீரல் பாதிப்பு இருந்தது. கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கொண்டு செல்லப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு அவரது உடல் தகனம் நடக்கிறது.
ஜெ.குரு 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் 2 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காடுவெட்டி ஜெ.குருவின் மறைவைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் என 9 மாவட்டங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
பண்ருட்டி, புதுநகர், முதுநகர், ரெட்டிச்சாவடி, சிதம்பரம், கருவேப்பிலங்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி டவுன்ஷிப் ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் மீதும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 பேருந்துகள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனை அடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் என்ற இடத்தில் நெய்வேலியில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்சும், திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் சென்ற பேருந்து, சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை சென்ற பேருந்து கல்வீசி சேதப்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இங்கு 3 அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, அரியலூர், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
திண்டிவனத்தை அடுத்த காளை பகுதியில் சென்ற சென்ற பேருந்து நள்ளிரவில் கல்வீசி உடைக்கப்பட்டது. செஞ்சியில் 3 பேருந்துகள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 19 பேருந்துகள் சேதம் அடைந்தது.
அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பகுவிக்கப்பட்டனர்.
பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன.
அதேபோல, வேலூர் மாவட்டத்தில் 9 பேருந்துகள் உடைக்கப்பட்டன. காட்பாடியை அடுத்த லத்தேரி வழியாக சென்ற 2 பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தனியார் கம்பெனியில் இருந்து ஆட்கள் ஏற்றிச் சென்ற 3 பேருந்துகள் மீது 6 பேர் கும்பல் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கின. அருகில் இருந்த 2 பேக்கரி கடைகள் மீதும் அவர்கள் கல்வீசி தாக்கி தப்பி சென்று விட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பேருந்துகள் மீது கல் வீசி உடைக்கப்பட்டது. கலசப்பாக்கத்தில் ஒரு பஸ், வந்தவாசி மற்றும் அதனருகே உள்ள பொன்னூரில் 5 பேருந்துகள், மங்கலத்தில் ஒரு பேருந்து, போளூரில் 1 பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சேலம் சீல நாயக்கன்பட்டி பைபாசில் சென்னையில் இருந்து கோவை சென்ற பேருந்து உடைக்கப்பட்டது. டால்மியா அருகே பெங்களூர் சென்ற ஆம்னி பேருந்தும் கல்வீசி தாக்கப்பட்டது. மேச்சேரி, காடையாம்பட்டி, தீவட்டிபட்டி, ஆத்தூர் பகுதியில் 7 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டது. மொத்தம் 9 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது.
வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு சென்ற அரசு பஸ் மீது மேல்விஷாரத்தில் கல்வீசப்பட்டது. ஆற்காட்டில் மட்டும் 3 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டது. வாலாஜாவில் ஒரு பேருந்து அரக்கோணத்தில் ஒரு பேருந்து உடைக்கப்பட்டது. விரிஞ்சிபுரத்தில் ஒரு அரசு பேருந்து மீது கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது.
வேலூரில் இருந்து ஆரணி சென்ற தனியார் பஸ் அடுக்கம்பாறை அருகே கல்வீசி உடைக்கப்பட்டது. போளூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அரசு பேருந்தை மடக்கி சிலர் தாக்க முற்பட்டனர். போலீசார், அவர்களை சமரசம் செய்து தாக்குதலை தடுத்தனர்.

வந்தவாசி பஜார் வீதி, மேல்மருவத்தூர் ரோட்டில் கடைகளை அடைக்குமாறு பா.ம.க.வினர் திரண்டு வந்து வியாபாரிகளிடம் கூறினர். இதையடுத்து வந்தவாசி நகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஆரணியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர் அருகே பத்தகப்பட்டி என்ற இடத்தில் அரசு பேருந்து கல்வீசி உடைக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் வள்ளாலகாம் சிவபிரியா நகரில் இன்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தி ஓடி விட்டனர். கும்பகோணம் சுவாமி மலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. திருவையாறு மெயின் ரோடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
மொத்தமாக 9 மாவட்டங்களில் 75 அரசு பேருந்துகள் கல்வீசி அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள். இந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
