கோவிலைச் சுத்தம் செய்யக்கோரி 70 வயது முதியவர் 30 அடி கம்பத்தில் ஏறி தீக்குளிக்க முயற்சி…
திருப்பூரில் உள்ள பொன்காளியம்மன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்யக் கோரி 70 வயது முதியவர் 30 அடி தீபக் கம்பத்தில் ஏறி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலையம் பின்புறம் பொங்காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் முன்புறம் 30 அடி உயரத்தி தீப கம்பம் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி கடைகள் அதிகம்.
நேற்று மாலையில் காவி வேட்டியணிந்த முதியவர் ஒருவர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் தீப கம்பம் அருகே நின்றுக் கொண்டிருந்தார். பின்னர், அவர் தீப கம்பத்தின் மீது ஏறி, தீபம் வைக்கும் இடத்திற்கு அருகேச் சென்றார்.
பின்னர், கேனில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு “நான் தற்கொலை செய்யப்போகிறேன்” என்று சத்தமிட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர்கள் உடனே காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்குவந்த காவலாளர்கள் அந்த முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுதான், அவர் தான் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணத்தை போட்டுடைத்தார்.
அது, “பொன்காளியம்மன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும், கோவில் மடத்தில் அடியார்கள் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்ற தனது கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்று ஆட்சியர் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் அப்போதுதான் கீழே இறங்குவேன், இல்லாவிட்டால் தீக்குளித்து சாகவும் தயார்” என்று கூறினார்.
உங்கள் கோரிக்கையை ஏற்று கோயிலை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் உறுதியளித்து முதியவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியபோது அவருடைய பெயர் பன்னீர் செல்வம் (70) என்றும், பல்லடத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதனையடுத்து அவரை காவலாளர்கள் எச்சரித்து அனுப்பினர்.