6 வயது சிறுமியை நாசம் செய்து... கல்லைப் போட்டுக் கொன்ற கொடூரன்... நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கிணத்துபட்டி அருகே 6 வயது சிறுமியை கொடூரன் ஒருவன் பாலியல் பலத்தகாரம் செய்து, கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்து தப்பினான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் மட்டுமல்லாது கிராமத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கே குவிக்கப் பட்டனர்.
செம்மினபட்டியை சேர்ந்த 6 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். மேலும், அந்தச் சிறுமி அணிந்திருந்த நகைகளையும் திருடிச் சென்றுள்ளான். தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட நபரை தேடிய போலீஸார், அவனைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அந்தச் சிறுமியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திண்டுக்கல் திருச்சி நெடுஞ் சாலையில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நேராமல் தடுக்க, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கே குவிக்கப் பட்டனர். சாலை மறியல் செய்தவர்களுடன் சமாதானம் பேசிய போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.